
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் உலக உணவுத் திட்ட அவசரநிலை இணைப்பாளர் ஜோஸ்பன்ட் முஸோங்காவுடன் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் 08.02.2023 அன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட 6 பிரதேச செயலகங்களில் போதிய வருமானமற்ற மக்களுக்கு உலக உணவுத் திட்டம் மற்றும் வேல்ட் விஷன் ஆகிய அமைப்புக்கள் இணைந்து கடந்த காலங்களில் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்திருந்தனர். 60 நாட்களை கொண்ட உலக உணவுத் திட்டத்தின் உலர் உணவு பொதிகள் வழங்கல் செயற்பாட்டின் போது எதிர்கொண்ட சவால்கள், பிரச்சினைகள் மற்றும் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் தொடர்பாக அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், சமுர்த்திப் பயனாளிகள், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குடும்பங்கள், குறைந்த பொருளாதார வசதியுடைய குடும்பங்கள் என்ற வகைகளில் கிராம உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட நபர்களிடம் கையளிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.
உலக உணவு திட்டத்தின் உயரதிகாரி கீரன் பொல்,மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார், உலக உணவு திட்டம் நிகழ்ச்சி திட்ட உதவியாளர் திருமதி.பத்மரஜனி கேதிஸ்வரன், வேர்ல்ட் விஷன் (World Vision )அதிகாரி என பலரும் கலந்து கொண்டனர்.






