
ஐக்கிய இராட்சிய தூதுவர் அலுவலகத்தின் முதன்மை செயலாளருக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று 09.08.2023 அன்று இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களது தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலில் ஐக்கிய இராட்சிய தூதுவர் அலுவலகத்தின் முதன்மை செயலாளர் ஹென்றி மற்றும் ஐக்கிய இராட்சிய தூதுவர் அலுவலகத்தின் பிரதி நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் மிஷ்லி உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலின்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், விசேடமாக இதன்போது வீடற்ற குடும்பங்களிற்கு தேவைப்பாடாக உள்ள வீட்டு திட்ட உதவி தொடர்பாகவும், விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், மாவட்டத்தில் காணப்படும் காணி பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவை தொடர்பாக மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமாரினால் அளிக்கையொன்றும் செய்யப்பட்டது.
இக்கலந்துரையாடலில் UNDP நிறுவனத்தின் அதிகாரிகள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவனீதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளித்திருந்தனர். UNDP நிறுவனமானது மாவட்டத்தில் வீட்டு தேவைப்பாட்டினை கொண்ட குடும்பங்களிற்கு 50 வீடுகளை நிறுவுவதற்காக ஏற்கனவே உதவிகளை மேற்கொண்டமைக்காக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தமது நன்றியினை ஐக்கிய இராட்சிய தூதுவர் அலுவலகத்தின் முதன்மை செயலாளருக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






