
உலக உணவுத் திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வவுணதீவு, கிரான் மற்றும் ஏனைய பிரதேச மக்களுக்கான நலனுதவித்திட்டங்கள் 21.08.2023 அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உலக உணவுத் திட்டத்தின் மூலம் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பெறுமதியான விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு எஸ். சுதாகரன் தலைமையில் இடம் பெற்றது. இதன்போது சிறிய ரக களை நீக்கும் உழவு இயந்திரங்கள் 08, நிலக்கடலை கோது நீக்கி இயந்திரங்கள் 04, விவசாயத்திற்கான நீர் குழாய்கள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள், இலங்கைக்கான உலக உணவு திட்ட பணிப்பாளர் அப்துல் ரகிம் சித்திக்கி மற்றும் ஜனாதிபதி செயலக உலக உணவுத் திட்ட பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுலக்சன ஜயவர்த்தன ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆயித்தியமலை 4ம் கட்டை பிரதேசத்தில் சுமார் 25 இலட்சம் பெறுமதியிலான ஜஸ் கட்டிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டது. இதனூடாக இரவு நேரங்களில் பிடிபடும் மீன்களை சேகரிப்பதற்கான வசதிகள் இத் தெழிற்சாலையினால் செய்து கொடுக்கப்படுவதுடன், பெருமளவான மீனவ குடும்பங்கள் நன்மை பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள், சமுர்த்திப் பயனாளிகள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குடும்பங்கள் என்பவற்றிற்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 24 கிலோ அரிசி, 20 கிலோ பருப்பு மற்றும் 5 லீற்றர் சமையல் எண்ணெய் உள்ளடங்கிய உணவுப்பொதி 297 குடும்பத்தினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுடன், பின்தங்கிய பிரதேசங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் போசாக்கு நிலைமையை கருத்திற் கொண்டு அவர்களுக்கான சத்துணவுகள் மற்றும் திரிபோசா என்பனவும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு கிரான் பிரதேச செயலக பிரிவில் புலிபாய்ந்தகல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் இடம்பெற்றது.


இதுதவிர கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி வள்ளிபுரம் கனகசிங்கத்தின் பங்குபற்றுதலுடன் விவசாயபீட மாணவர்களுக்கு புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய வேளான்மை வணிகம் எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வு உலக உணவுத்திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





