
மட்டக்களப்பில் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவத்திற்கு 2022 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் திரு செல்வரத்தினம் ஜெயபாலன் அவர்கள் தலைமையில் தேசிய கல்வி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் 06.09.2023 அன்று இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி திரு ரி.கணேசரத்தினம் கலந்து கொண்டனர். இதன்போது உள்ளீர்க்கப்பட்ட மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சி.எஸ் லிவன்கமகே நிகழ்நிலை மூலம் தனது வாழ்த்தினை வழங்கியிருந்தார்.
1000 மேற்பட்ட மாணவ மாணவிகளினால் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் 540 மாணவர்களே பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இவர்களில் 310 மாணவர்கள் முழுநேர கற்கைநெறிக்கும், 230 மாணவர்கள் பகுதி நேர கற்கைநெறிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளதுடன் மாவட்டத்தில் ஆங்கிலக் கல்வி அறிவை உயர்த்துவதற்கு உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம் பாரிய சேவை செய்து வருவதாக பணிப்பாளர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் உள்ள உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனங்களிளே மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவகமே அதிகூடிய மாணவர்களை பயிற்றுவித்து வெளியேற்றி வருகின்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன் மாணவ மாணவிகளின் கண்கவர் நடனங்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் உயர் தொழில்நுட்ப நிறுவகத்தின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.







