
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு வழங்கும் செயலமர்வு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் நடாத்தப்பட்டது.ஜனாதிபதி செயலகத்தின் வட கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன் தலைமையில் வின்சன்ற் உயர் தர மகளிர் தேசிய பாடசாலை மண்டபத்தில் 19.09.2023 அன்று இடம் பெற்றது. ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக சிவில் விமான போக்குவரத்து துறையில் இளைஞர் யுவதிகளை உள்வாங்குவதற்கான செயற்திட்டமாக இத்திட்டம் அமைந்திருந்தது.
விமானத்துறையில் ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் எதிர்காலத்தில் இத்துறையில் காணப்படும் தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்கான முன்னாயத்தங்கள், அடிப்படை தகைமைகள் தொடர்பாகவும், இத்துறையில் உள்ள தொழில்நுட்ப முறைமைகள், இத்தொழிற்துறையில் உள்ள சவால்களை எவ்வாறு கையாள்வது போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் இதன்போது துறைசார் அதிகாரிகளினால் மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா கலந்துகொண்டதுடன், குறித்த நிகழ்வில் விமானப்படை உயர் அதிகாரி பிரபாத் குளரத்ன, விமானி கப்டன் எஸ்.ஸ்ரீதரன் சேகரம், வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், வின்சன் உயர்தர மகளிர் தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி.உ.தவதிருமகள் உள்ளிட்ட மட்டக்களப்பு விமான நிலைய உயரதிகாரிகள், துறைசார் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது மாணவர்களிடம் துறைசார் கேள்விகள் கேட்கப்பட்டதுடன், சரியான விடைகளை கூறிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







