
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 20.09.2023 அன்று இடம் பெற்றது.
மாவட்டத்தில் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் செயலணி மற்றும் உள வள ஆற்றுப்படுத்தல், சிறுவர் அபிவிருத்தி, பெண்கள், சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் கணவனை இழந்த மற்றும் பிரிந்து வாழும் பெண்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும், அவர்களின் பிள்ளைகளை பராமரிப்பதற்கு ஒரு பிரதேசத்திக்கு பிள்ளைகளை பராமரிக்கும் காப்பகம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
சிறுவர்களுக்கு சமூகத்தில் போதைப் பொருள் பாவனையற்ற நல்லதொரு சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. பிரதேச மட்ட பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் நடவடிக்கைகளின் போது எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். பாடசாலை மாணவர்கள் மத்தியில் இடைவிலகல் மற்றும் தொடர்ச்சியான வரவின்மையை கட்டுப்படுத்தி சிறந்த கல்வி சமூகத்தை உருவாக்கும் நோக்கில் கட்டாயக் கல்விக் குழுக்களை வலயக் கல்வி பணிமனை ஊடாக கிரமமாக செயற்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தற்கொலை முயற்சிகளை தடுத்தல் மற்றும் உளவளத்துணை செயற்பாடுகளை ஒருங்கிணைத்து பிரதேச செயலக மட்டத்தில் சிறுவர் பெண்கள் பிரிவின் செயற்பாடுகள் பற்றியும் உத்தியோகத்தர்களால் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அலுவலகத்தின் உளநள வைத்திய அதிகாரி டான் செளந்தரராஜா மற்றும் மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் அருனாளினி, பிரதேச செயலாளர்கள், பொலிசார், செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







