மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவுகின்ற வறட்சியான சூழலை முகாமைத்துவம் செய்யும் இணைப்புக்குழுவின் விசேட கூட்டம் கடந்த 06.08.2019 செவ்வாய் கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வறட்சியினால் 25,005 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் 26 இலட்சம் ரூபா நிதியில் 30 ஆயிரம் லீட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இத்துடன் 7723 ஏக்கர் நெல் வயலும், 629 ஏக்கர் மேட்டு நில பயிர்களும், 750 நன்னீர் மீனவர்களும் கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் காட்டுயானை தொல்லையும் அதிகரித்துள்ளதாகவும் இந்த விசேட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் தற்போதைய சூழலில் உன்னிச்சை குடிநீர் திட்டத்தினால் குடிநீர் மற்றும் விவசாயபயிர்ச் செய்கைக்கு எவ்விதம் நீரைப் பகிர்ந்து கொள்வது பற்றியும் ஆராயப்பட்டது. அத்துடன் இவ்வரட்சிச்சூழல் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் மேலும் சில விடயங்கள் ஆராயப்பட்டது.
- தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி காலநிலை மாற்றத்தினால் குடிநீரினை சிக்கனமாக பாவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டமை. குறிப்பாக நீர்வழங்கல் சபையினால் வழங்கப்படும் நீரினை குடிப்பதற்கு மாத்திரம் பயன்படுத்துவதுடன் ஏனைய தேவைகளுக்கு கிணற்று நீரினை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
- நீர் முகாமைத்துவத்தினை திறன்பட செய்யும் நோக்குடன் இனிவரும் காலங்களில் விவசாய குழுக்கூட்டத்தினை நேர காலத்துடன் நடத்தி உரிய நிறுவனங்களை ஒருங்கிணைத்து நீரினை முகாமை செய்து வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுத்தல்.
- மாவட்ட மட்ட விவசாய குழுக்கூட்டத்தினை கூட்டி இது தொடர்பாகவும் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி நிலமை தொடர்பாகவும் அறிவுறுத்தி உரிய பொறிமுறையினை ஏற்படுத்தல்.
- பிரதேச செயலாளரின் தலமையில் நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்க ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேசத்தில் உள்ள குடிப்பதற்கு உகந்த பொது கிணறுகளை பயன்படுத்தி (பொது சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையின் கீழ்) குடிநீரினை தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- இதற்கு மேலதிகமாக பொலிஸ் மற்றும் முப்படையினரின் பங்களிப்பினை பெற்றுக்கொள்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் குடிநீர் வழங்குவதற்காக முதற்கட்டமாக 2.6 மில்லியன் ரூபா தற்போது வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக தேவைப்படும் ஒதுக்கீடு மற்றும் குடிநீர்த்தாங்கிகள், வவுசர்களும் பெற்றுத்தர மாவட்ட செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- தொடரும் வரட்சி பாதிப்புக்களின் தகவல்களை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு தொடர்ச்சியாக வழங்குவதுடன் சம்மந்தப்பட்ட திணைக்களகங்களினூடாக நிவாரணம் மற்றும் நஸ்டஈட்டினை பெற்றுக்கொடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டமை.குறிப்பாக காப்புறுதி சபைக்கு பாதிப்புக்கள் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குமாறு கமநல ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டமை.
- காப்புறுதி செய்யப்படாத பயிர்கள் தொடர்பான தகவல்ளை பிரதேச செயலாளர்கள் வழங்குவதுடன் இதற்கான நஸ்டஈட்டினை எதிர் காலத்தில் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- வரட்சியினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான தகவல்களை வழங்குவதுடன் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் வசதியினை செயற்கையான நீர்த்தொட்டிகளை அமைத்தல் மற்றும் மேச்சல் புற்தரைகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காலநடை உற்பத்தி சுகாதார திணைக்களமத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
- வரட்சி நிலமை தொடர்வதன் காரணமாக காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள் உட்புகுதல் மற்றும் உயிர்ச்சேதங்கள் அதிகரிப்பதன் காரணமாக இதை தவிர்பதற்கு முன்னாயித்த திட்டங்களை அமுல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
- நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றினை இலங்கை செஞ்சிலுவை சங்கம் நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
- பழுதுடைந்த நிலையில் காணப்படும் குழாய் கிணறுகளை புணரமைப்பதற்கான தொழில்நுட்ப உதவியினை வழங்குவதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை முன்வந்துள்ளது.
- வவுனதீவு தொண்டர் நிறுவனம் தொண்டர்களை பயன்படுத்தி குடிநீர் பெற்றுக்கொள்ள கூடிய கிணறுகளை சுத்தப்படுத்தி தருவதற்கு முன்வந்துள்ளது.
- தற்போது வரட்சி நிலமை தொடர்வதன் காரணமாக அரசினால் வழங்கப்படும் உதவிகளுக்கு மேலதிகமாக மாவட்டத்தில் சேவையாற்றுகின்ற அரசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து குடிநீர்த்தாங்கிகள், வவுசர்கள் மற்றும் மேலதிக தேவைப்பாடுகள் தொடரபாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் பல நிறுவனங்கள் கோரிக்கையினை ஏற்று வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
இதில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் திரு.ஏ.எஸ்.எம்.சியாத் அவர்கள் மாவட்ட பாதிப்புக்கள் பற்றிய அறிக்கையினை இக்கூட்டத்தில் சமர்பித்தார். அத்துடன் நீர்ப்பாசனம், விவசாயம், வணஜீவராசிகள், கால்நடை உற்பத்தி சுகாதாரம், தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை மற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.














