
மாவட்டத்தில் திறன்மிகு ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஆர்.பி.எல்.(RPL) முறையில் என்.வி.கியு (NVQ) சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதற்கான விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களது வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 13.10.2023 அன்று பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார் தலைமையில் மனிதவலு திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் வி.மைக்கல் கொலின் நெறிப்படுத்தலின் கீழ் நடை பெற்றது.
மாவட்ட தொழில் நிலையம், மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து முறையான அல்லது முறை சார் தொழில் திறனைக் கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான அதிகாரமளித்தல் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இச்செயலமர்வை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தனர்.
நாட்டின் அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் நோக்கமாகக் கொண்டு தொழில்நுட்ப அறிவுமிக்க மனிதவளத்தை வலுவூட்டுகின்ற அடிப்படையில் உலகளாவிய மட்டத்திலான தொழிற்படையை இலங்கையில் உருவாக்கும் நோக்கில் அரச அங்கீகாரம் பெற்ற தொழில் கல்வி நிறுவனங்களினால் பெறுமதியான சான்றிதழ்களை பெற்றுக்கொடுப்பதனூடாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனும் நோக்கத்துடன் இச் செயலமர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செயலமர்வில் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.கருணாகரன் விழிப்பூட்டல் தொடர்பாக முழுமையாக விளக்கமளித்துடன், அதனைத் தொடர்ந்து திறன் அபிவிருத்தி அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் சிவகுமார் இளைஞர்களுக்கு வலுவூட்டும் கருத்துக்களை வழங்கினார். இந் நிகழ்வில் மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு, காத்தான்குடி, மண்முனைப்பற்று பிரதே செயலகத்தை சேர்ந்த தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







