
பெறுகை நடைமுறையினை சீராக நடைமுறைப்படுத்துவதனூடாக கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி உயர்மட்ட விளைவுகளை பெற்றுக் கொள்ள அரச அதிகாரிகளுக்கு வழிகாட்டும் இருநாள் செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டலில் தேசிய பெறுகை நடைமுறையினை அரச அபிவிருத்தி மற்றும் அமுலாக்கத் திட்டங்களின்போது வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.எம். பஸீர் அவர்களின் தலைமையில் 28,29 ஆந் திகதிகளில் இடம்பெற்றது.
இச்செயலமர்வில் மாவட்ட செயலகம் மற்றும் 14 பிரதேச செயலகங்களில் கடமைபுரியும் கணக்காளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், பெறுகை நடைமுறை விடயதானத்துடன் தொடர்புடைய அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இவ்வதிகாரிகளுக்கு தேசிய பெறுகை நடைமுறை வழிகாட்டி, நிதிப்பிரமானம் மற்றும் தொடர்புடைய சுற்று நிருபங்கள் தொடர்பாகவும் விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான ஆரம்பகட்ட மற்றும் இறுதிக் கொடுப்பனவுகளின்போது மேற்கொள்ளப்படும் கணக்காய்வுகள் தொடர்பாகவும் தெளிவூட்டப்பட்டன. இச்செயலமர்வில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்கள மாகாணப் பணிப்பாளர், பொறியியலாளர் எஸ். ராஜகோபாலசிங்கம் மற்றும் கணக்காய்வு அத்தியட்சகர் அசனார் மாஹிர் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.







