
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச மட்டங்களில் இடம்பெறும் அரச அபிவிருத்தி செயற்பாடுகளை ஊடக மயப்படுத்த மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைவாக பிரதேச செயலக பிரிவுகளில் இடம்பெறுகின்ற அரச நிகழ்வுகள், அபிவிருத்தி செயற்பாடுகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை மாவட்ட ஊடகப் பிரிவிற்கு வழங்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தனின் தலைமையில் 21.12.2023 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இடம்பெறும் நிகழ்வுகளை மாவட்ட ஊடகப் பிரிவிற்கு அறிக்கையிட நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும், மாவட்ட செயலகத்தின் திணைக்களம் சார் செய்திகளை அறிக்கையிடும் உத்தியோகத்தர்களுக்கும் செய்தி சேகரித்தல், செய்தி தயாரித்தல், ஊடக நெறிமுறைகள், சமூக ஊடகங்களில் செய்தி அறிக்கையிடல், ஒலி, ஒளிப்பதிவு செய்தல் மற்றும் புகைப்படம் எடுத்தல் தொடர்பான வழிகாட்டல்கள், செயன்முறையுடன் கூடிய பயிற்சிகள் சிரேஸ்ட வளவாளர்களான ரூபவாஷனி கூட்டுத்தாபனத்தின் சிரேஸ்ட தயாரிப்பாளர் எம்.ஐ.ஜாபீர், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.வீ.எம்.பைறூஸ், றீம் ஸ்பேஸ் எக்கடமியின் ஊடக பணிப்பாளர் ஜஸ்மினா நவரெட்ணராஜா மற்றும் றீம் ஸ்பேஸ் எக்கடமியின் இணை பணிப்பாளர் ஆர்.எம்.பாஷீத் ஆகியோரினால் சிறந்த முறையில் வளவாண்மை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்விற்கு அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கிய மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் அரசின் விசேட நிகழ்வுகள், அபிவிருத்தி செயற்பாடுகளை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் என்பவை தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மிகச்சரியாகவும், துல்லிமாகவும், உடனுக்குடன் வழங்கவேண்டும் அதற்காக அனைவரும் தங்களது பூரண ஒத்துழைப்பினை மாவட்ட செயலகத்திற்கு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இச்செயலமர்வில் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆர்.காயத்திரி, மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன், மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மாவட்ட ஊடகப் பிரிவின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொணடனர். குறித்த பயிற்சி செயலமர்வின் நிறைவில் பங்குபற்றிய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








