
மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டின் அலுவலக செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் அவர்களின் தலைமையில் 01.01.2024 ம் திகதி இடம்பெற்றது. 2024 ஆம் ஆண்டுக்கான பணிகளை ஆரம்பிக்கும் முதல் நாள் வைபவம் ''வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை'' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
தேசியக்கொடியேற்றப்பட்டு, இராணுவ வீரர்கள் உட்பட தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து 02 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சர்வமத தலைவர்களின் ஆசியுரையினை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரின் விசேட உரையும் இடம்பெற்றது. இதன்போது அனைத்து உத்தியோகத்தர்களாலும் இவ்வாண்டிற்கான அரசசேவை உறுதியுரை மேற்கொள்ளப்பட்டது.
இந் நிகழ்வானது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றதுடன், இதன்போது மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்கேற்றிருந்ததுடன், நிகழ்வின் நிறைவில் உத்தியோகத்தர்களிடையே புத்தாண்டு பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதே வேளை மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்கள், சுகாதார திணைக்களம் சார்ந்த அலுவலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச வங்கிகள் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்கள் சார்ந்த அலுவலகங்களிலும் இந்நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தது.







