
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் 04.01.2024 அன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களின் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்துகொண்டார். இதன்போது ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட சித்தாண்டி மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இக்களவிஜயத்தின்போது ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபு, அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ரியாஸ், மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி வ.ஜீவானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.







