
மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் அவர்கள் பிரதேச செயலாளராக பதவியுயர்வு பெற்று மோர வேவ பிரதேச செயலகத்தில் 10.01.2024 அன்று கடமையை பெறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு 09.01.2024 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
34 வருட அரச சேவையைக் கொண்ட இவர் முகாமைத்துவ உதவியாளராக 1989 ஆம் ஆண்டு அரச நியமனம் பெற்று, அதன் பின்னர் இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று நிர்வாக சேவையில் உள்வாங்கப்பட்டிருந்தார். பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 6 1/2 வருடங்கள் உதவி மாவட்ட செயலாளராக தனது சிறந்த சேவையினை ஆற்றியுள்ளார்.
மட்டக்களப்பில் மாத்திரம் அல்லாது திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனது அரச கடமையை திறம்பட ஆற்றியுள்ளார். மாவட்டத்தில் சிறந்த வளவாளராகவும், விசாரணை அதிகாரியாகவும் இவர் திகழ்ந்துவருவதுடன்,முறன்பாட்டு முகாமைத்துவத்தினை கையாள்வதில் இவர் சிறந்ததொரு நிபுணராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவரது சிறந்த சேவையினை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் அவர்களின் சிறந்த சேவையினை பாராட்டி மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் அவர்களை வாழ்த்தி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







