
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்கள், வர்த்தக வாணிப இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே முதரளிதரன் அவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மட்டக்களப்பில் உள்ள இடைத்தங்கல் முகாம்களிற்கு 13.01.2024 அன்று விஜயம் மேற்கொண்டு சித்தாண்டி அலைமகள் வித்தியாலயம், வந்தாறுமூலை கணேசா வித்தியாலயம் ஆகியவற்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட்டுள்ளனர். இதன் போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடி இடைத்தங்கல் முகாம்களையும் பார்வையிட்டு முகாம்களில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை உடன் தீர்த்து வைக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இவ் விஜயத்தின் போது இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை ஆளுனரும் இராஜாங்க அமைச்சரும் இணைந்து வழங்கி வைத்துள்ளனர். கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் குறித்த நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் விஜயத்தின் போது ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம், ஏறாவூர்பற்று பிரதேச சபை செயலாளர் வ.பற்குணன், கிழக்கு மாகாண சமூக சேவை பணிப்பாளர் கே.இளங்குமுதன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்களான ஏ.எல்.எம்.அலியார், எஸ்.அருள்மொழி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவை உத்தியோகத்தர் சுரேஸ் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.







