
உலக உணவு திட்டத்தின் மூலம் ஐம்பது இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவின் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வர்த்தக இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட 17 ஆரம்ப பாடசாலைக்கான உணவு வழங்குனர்களுக்கான உபகரணங்கள் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக வளாகத்தில் வைத்து 03.02.2024 அன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் உள்ளிட்டோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர். உலக உணவுத்திட்டத்தின் மூலம் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 5013 பேருக்கு போசாக்கான சமைத்த உணவுகள் வழங்குனர்களை
ஊக்குவிக்கும் செயற்திட்டமாக இது அமைந்திருந்தது. இதன் போது 3 நபர்களுக்கு சுமார் ஐம்பது இலட்சம் பெறுமதியான வீட்டுத் தோட்ட விவசாய உற்பத்தி செய்வதற்கான விதை பொருட்கள் மற்றும் கோழி வளர்ப்பிற்கான உபகரணங்கள், நீர்த்தாங்கிகள், முட்கம்பிகள், நீர்ப்பம்பிகள் என பல பொருட்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார், வைத்தியர்கள், திணைக்களங்கள் சார் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.







