
அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா அவர்களினால் வழிபாடு வாழ்வாகுமா நூல் வெளியீட்டு விழா தன்னாமுனை சூசையப்பர் ஆலயத்தில் 20.02.2024 அன்று மிகச்சிறப்பாக இடம் பெற்றது. இந் நூல் வெளியீட்டு விழாவில் முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை கலந்துகொண்டதுடன், குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களும் கௌரவ விருந்தினராக தூய காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை தங்கத்துரை அன்ரனைனஸ் யூலியன் அவர்களும் கலந்து கொண்டனர்.
மறை போதித்த மனிதன் அமரர் திரு பொன்னையா பிரான்சிஸ் தங்கத்துரை அவர்களிற்கு நினைவு அஞ்சலி செலுத்தி முழு நேர மறை போதகர்களின் வாழ்நாள் பணிக்கான பாராட்டும் கெளரவிப்பும் பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகையினால் இதன் போது வழங்கப்பட்து. இந் நூலில் கத்தோலிக்க வழிபாட்டு இறையியல் தொடர்பாக நூலாசிரியர் அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா தனது கருத்துகளை இந் நூலின் வாயிலாக வெளிக்காட்டியுள்ளார்.இந் நூலின் வெளியீட்டு உரையை அருட்தந்தை செபஸ்ரியன் றெவல் அமதியும் நூல் ஆய்வுரையை திருகோணமலை அலஸ்தோட்ட இறை இரக்கத் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை டக்ஸஸ் ஜேம்ஸ் அவர்கள் வழங்கியதுடன் நயப்புரையை அருட்தந்தை தங்கத்துரை அன்ரனைனஸ் யூலியன் அவர்கள் வழங்கினார்.
மட்டக்களப்பு மறைமாட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவத்துறை இணைப்பாளர் அருட்தந்தை அ. அ. நவரெத்தினம், அருட்தந்தையர்கள், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவக பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கென்னடி பொதுமக்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.







