
"உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம் அவர்களின் தலைமையில் நகர மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
குறித்த நிகழ்விற்கு விசேட அதிதியாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் முதலமைச்சின் செயலாளருமான என்.மதிவண்ணன் அவர்களும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.ஹரிகரராஜ், மட்டக்களப்பு மாநகர சபையின் பொறியியலாளர் உள்ளிட்ட மாநகர சபையின் உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகங்களின் நூலகர்கள் உள்ளிட்ட நூலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, வரவேற்புரை மற்றும் தலைமையுரையினை மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நடன கலைஞர்களின் அழகிய கண்கவர் நடனங்கள், மாணவர்களின் பேச்சுக்கள், பொது நூலகங்களினால் வெளியிடப்பட்ட எட்டு சஞ்சிகைகளின் வெளியீடு, தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள் உள்ளிட்ட வாசகர்களுக்கும் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







