
மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சனைகள் தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று 24.02.2024 அன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் விஜத்தினை மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த நீதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கள விஜங்களை மேற்கொண்டு மாவட்டத்தின் நிலமை தொடர்பாக அறிந்து கொண்டதுடன் மட்டுமல்லாமல், பல தரப்பட்ட துறைசார் அதிகாரிகள், மாவட்ட சமூக அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடி, அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டீனா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் காணி பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலில் நீதிஅமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்.
குறித்த கலந்துரையாடலில், மாவட்டத்தில் காணப்படும் நிலப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றிற்கான தீர்வை பெற்றுக் கொள்வது தொடர்பில் பல்வேறுபட்ட ஆலோசனைகளை இதன் போது நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ அவர்கள் வழங்கினார். இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






