
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி ஒழுங்கு முறைகள் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்குத் தெளிவூட்டும் பயிற்சிநெறி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 05.03.2024 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் பீ.ரீ.ரீ.பீ. ஜயசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இச்செயலமர்வில் இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எம்.சீ.எம். அன்வர் புதிய வரி ஒழுங்குமுறைகள் தொடர்பாகவும், அரச அலுவலகங்களில் வரி அறவிடலுக்கான கணக்கிடும் முறை தொடர்பாகவும் அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.
மேலும் அரசினால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி நடைமுறை, அதற்கேற்ப வரி விதிவிலக்கு எல்லைகள் மற்றும் தொழில் வழங்குனர், தொழில் பெறுனர்கள்களிடமிருந்து அறவிடப்படும் வரிகளின் விகிதம் தொடர்பாகவும், தனிநபர் மற்றும் கூட்டு தொழில் முயற்சிகளின் போது வழங்கப்படும் வரிச்சலுகை எல்லைகள் மற்றும் தேறிய வருமானத்திற்கான வரி விகிதம் தொடர்பாகவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது. இதுதவிர அரச அதிகாரிகளின் சந்தேகங்கள், கேள்விகளுக்கும் இங்கு பதிலளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.எம். பசீர், மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், பிரதி மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக, பிரதேச செயலக சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.







