
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் பாடசாலை மற்றும் சகல சாரணர் அமைப்புகளின் 2024 ஆம் வருடத்திற்கான பொதுக்கூட்டம் 30.05.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட சாரணர் அமைப்பின் தலைவரும் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற, இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டாலுவல்கள் அமைச்சின் அதிகாரியும் மாவட்ட சாரணர் இயக்கத்தின் பொதுச் செயலாளருமான சரவணமுத்து நவநீதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 115 பதிவு செய்யப்பட்ட சாரண அணிகள் செயல்படுவதுடன் அவற்றில் 64 பாடசாலைகளின் சாரண அணியினர் தற்போதும் செயற்பாட்டில் உள்ளனர். ஒரு நாட்டின் சாரணர் இயக்கத்திற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி தலைவராகவும், மாவட்ட சாரண அணியினருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் தலைவராகவும் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நூற்று நான்கு வருடங்கள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு மாவட்ட சாரணர் அணியாக இவ்வருடாந்தப் பொதுக்கூட்டத்தை நடாத்துவதுடன், நாடு முழுவதும் சாரணர் இயக்கங்கள் தொண்டுச் சேவைகளை சிறப்பாக வழங்கி வருகின்றமை இங்கு பாராட்டப்பட்டது. இந்நிகழ்வில் சாரணர் அமைப்புகளின் கொழும்பு உதவி பிரதம ஆணையாளர் மற்றும் உதவி ஏற்பாட்டுக் குழு ஆணையாளர் உட்பட சீருடை சாரணர் சங்க உதவி மாவட்ட ஆணையாளர்கள், ஏனைய சாரணர் சங்கங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







