
ரிதிதென்ன மகாவலி குடியேற்ற கிராமத்தில் நெல் அறுவடையினை முன்னிட்டு ரிதிதென்ன விவசாய சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கந்தூரி விழாவை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இப்பிரதேசத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளின் பாரம்பரிய நிகழ்வான கந்தூரி விழாவின்போது இப்பிரதேச பொதுமக்களுக்கு சமைத்த உணவுகள் பரிமாறப்பட்டன.
இந் நிகழ்வைத் தொடர்ந்து பல வருட காலமாக புணர்நிர்மானம் செய்யப்படாதிருந்த பல வீதிகளை இப்பிரதேச விவசாய அமைப்பினர்களினால் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் மகாவலி அதிகார சபையினரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் அரசாங்க அதிபர் இதன் போது பார்வையிட்டார். இந் நிகழ்வில் மகாவலி பிரதேச முகாமையாளர் திருமதி சசி அவர்கள், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.






