மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1ஆந் திகதி மற்றும் ஆகஸ்ட் 16 ஆந் திகதி நிலவிய அசாதாரண காலநிலையின் போது பலத்த சுழல் காற்றினால் 161 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருந்தது. இதற்கான நிவாரணப்பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை உணரப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் பணிப்பின் பெயரில் தேசிய அனர்த்த நிவாரண நிலையத்திற்கூடாக 1.6 மில்லியன் நிதியினை உடனடியாக விடுவித்து இச்சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 1ம் கட்டமாக வீடுகள் புணரமைப்பதற்கு தலா 10000 ரூபா காசோலை 06.09.2019 அன்று கரடியனாறு பிரதேசத்தில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபரால் வழங்கி வைக்கப்பட்டது.
சுழல் காற்றில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான கிரான், வவுணதீவு, வெல்லாவெளி, பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களே அதிகமாக பாதிக்கப்பட்ட கிராமங்களாகும். இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாக கலந்து பாதிக்கப்பட்டோருக்கு காசோலை வழங்கி வைத்த இந் நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலாளர் திரு.என்.வில்வரெட்ணம், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு.எஸ்.என்.சியாத், தேசிய அனர்த்த நிவாரண சேவை ஒருங்கிணைப்பாளர் திரு.இ.சிவநாதன் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். பலத்த சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான மதீப்பீட்டு அறிக்கை கிடைக்கப்பெற்றதும் 2ம் கட்டமாக முழுமையான பணத்தொகையினை வழங்க தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தீர்மானித்துள்ளது.
மாவட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்படுகின்ற பட்சத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் ஒருங்கிணைந்து அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் ஊடாக மாவட்டத்தில் அனர்த்த சேவையினை வழங்குவதற்கு எந்தநேரமும் முன்னாயத்தத்துடன் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








