
மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் சமுர்த்தி திணைக்களமும் இணைந்து உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை சிறப்பிக்கும் நோக்கில் மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் 01.10.2024 அன்று இடம்பெற்றது. பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டார்.
"பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம்'' மற்றும் உலகளாவிய சிரேஸ்ட பிரஜைகளுக்கான வலுவான பராமரிப்பு மற்றும் "ஆதரவுடன் முதியோர்களை கௌரவிப்போம்" எனும் தொனிப்பொருளில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் எமது நாட்டின் எதிர்கால தலைவர்களாகிய சிறார்களுக்கான கல்வியை நாம் அனைவரும் பெற்றுக் கொடுக்க வேண்டியது எமது கடமையாகும் என்பதுடன் இந்த சமூகத்திற்கு சிறந்த சேவையாற்றிய சிரேஸ்ட பிரஜைகளை கனம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் நற்பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும், அவர்களுக்கு பெற்றோர்கள் முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என கருத்து பகிர்ந்தார்.
ஷேன் பாலர் பாடசாலை சிறார்களினால் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. மேலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் போது முதியோர்களினால் பாடல்கள் இயற்றப்பட்டு இசைக்கப்பட்டதுடன் மேலும் இவர்களினால் சம்பாசனை நாடகமும் அரங்கேற்றப்பட்டது. வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்கா நிறுவனத்தினரினால் சிறார்கள் விரும்பும் அழகிய ஓவியங்கள் வரைந்து வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு, மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.பிரணவசோதி, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் வி.பிறைசூடி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பரமலிங்கம், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.







