
2024 பாராளுமன்ற தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதனால் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில் ஈடுபடும் அத்தாட்சிபடுத்தும் பாதுகாப்பு அலுவலர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.10.2024 அன்று நடைபெற்றது.
தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள், அத்தாட்சிபடுத்தும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக தெளிவூட்டப்பட்டது. மேலும் வாக்குகளை அத்தாட்சிப்படுத்தும் படிமுறைகள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.பி.எம் சுபியான்,பொலிஸ்அதிகாரிகள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் பாராளுமன்று தேர்தல் நவம்பர் மாதம் 14 திகதி இடம் பெறவுள்ள நிலையில் அஞ்சல் வாக்கு அடையாளம் இடும் தினங்களாக (30.10.2024) ஆம் திகதி பொலிஸ் நிலையம், மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் ,(01.11.2024 - 04.11.2024 ) பிற அரச நிறுவனங்கள் , பாதுகாப்பு படையினர், மீள்வாக்களிப்பு (07.11.2024 - 08.11.2024) தினங்களில் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திலும் வாக்களிக்க முடியுமென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 392 வேட்பாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதுடன் அதில் 5 பேர் தெரிவாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.






