
மகளிர், சிறுவர், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரனையுடன் மட்டக்களப்பு இளைஞர் சேவை மன்றத்தினால் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கும் சாதனையாளர் கெளரவிப்பும் 26.10.2024 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் நிசாந்தி அருண்மொழி அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் ஜீ.சஜீவ் தலைமையில் மட்டக்களப்பு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்விற்கு விசேட அதிதிகளாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாகாணப் பணிப்பாளர் எச்.யூ.சுசந்த, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான எம்.சசிகுமார், திருமதி.கே.சதீஸ்வரி, AULanka நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஞானப்பிரகாசம் சுரேஸ், AULanka நிறுவனத்தின் உத்தியோகத்தர் அனுலா அன்டன், பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள், மாவட்ட இளைஞர் சேவை பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது தலைமைத்துவ பயிற்சியினை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளும், தேசிய மட்டத்தில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கும் அதிதிகளினால் சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







