
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஐந்து ஆண்டு திட்டத்தின் நூல் வெளியீட்டு நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 21.11.2024 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. எதிர்வரும் 2028ம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய ஐந்தாண்டு திட்டங்கள் தொடர்பான குறித்த நூலின் வன் பிரதிகள் மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுக்கு வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.
துறைசார் நிபுணர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான புள்ளி விபர தரவுகளை மையமாக கொண்டு ஆய்வுகள் மேற்கொண்டு குறித்த நூல் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டமானது மக்கள் பிரதிநிதிகள் அரச உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், தொழிற்துறையினர், விவசாயிகள், இளைஞர்கள் யுவதிகள் என பல்வேறு தரப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடி கருத்துக்கள், பணிப்புரைகளை பெற்று இந்நூல் உருவாக்கம் பெற்று வெளியிடப்பட்டுள்ளது.
விவசாய உற்பத்தி,மனித வளஅபிவிருத்தி,உட்கட்டமைப்பு மேற்கொள்தல்,தொழிற்துறை அபிவிருத்தி,அனர்த்தம் முகாமைத்துவம் போன்ற ஐந்து முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் அமையப்பெற்றுள்ளது. இதன்போது அரசாங்க அதிபரினால் ஐந்தாண்டு திட்டத்தின் மென் பிரதி இணைய தளத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந், திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் (காணி), பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநிதன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் திட்ட நிபுணர் கே.பார்த்திபன் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.








