
மட்டக்களப்பில் இலங்கை சாரணர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் 2024/2025ம் ஆண்டுக்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும், மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.11.2024 அன்று நடைபெற்றது.
மாவட்ட சாரண சங்கத்தின் எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க அதிபருடன் இடம் பெற்றது. இதன்போது மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் சாரணர்கள் செயற்பாட்டை ஊக்குவித்து மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட சாரணர் நிருவாக கட்டமைப்பு தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் மாவட்ட சாரணர் சங்கத்தின் செயற்குழுவின் தவிசாளரும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளருமான வை. ஜயச்சந்திரன், மாவட்ட சாரணர் சங்கத்தின் செயற்குழுவின் செயலாளரும், கிழக்கு மாகாணக் கலாசார மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருமான எஸ். நவநீதன் மாவட்ட சாரணர் சங்கத்தின் செயற்குழு குழுவின் பொருளாளரும், கணக்காய்வு அத்தியட்சகருமான ரொபட் ,மாவட்ட சாரணர் சங்கத்தின் பதில் மாவட்ட சாரணர் ஆணையாளரும், இலங்கை சாரணர் சங்கத்தின் உதவிப் பிரதம ஆணையாளருமான அமிதன் கார்மேகம், இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமைக் காரியாலய ஆணையாளரும், கிழக்கு மாகாண இணைப்பாளருமான பி. சசிகுமார் உதவி மாவட்ட ஆணையாளர்களும், மாவட்ட சாரணத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.






