
மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகள் கிரான் பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்கான கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஜி பிரணவன் தலைமையிலான குழுவினர் மக்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திருமதி லோஜினி விவேகானந்தராஜ் பங்குபற்றுதலுடன், கூலாக்காடு முருக்கன்தீவு மற்றும் பிரம்படி தீவு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய கிராமங்களுக்கு களவிஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகள் பற்றியும் தீர்க்கப்படாத குறைபாடுகள் பற்றியும் அவற்றை செயல்படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கண்டறியப்பட்டது. அத்தோடு கிராமிய மட்ட சிறுவர் கழக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுடைய நடைமுறை செயற்பாடுகளில் எதிர்நோக்கப்படுகின்ற குறைபாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் குறிப்பிட்ட பிரதேசத்தில் போக்குவரத்து வசதிகள், காட்டு யானைகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றைக் கடப்பதற்கான வழிமுறைகள் படகு மூலம் போக்குவரத்தினை மேற்கொள்வதால் முகங்கொடுக்கின்ற இன்னல்கள் பற்றியும் இதன் போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். தரம் ஒன்பதுக்கு பிறகான கல்வி செயற்பாடுகளை தொடர்வதற்கு பிள்ளைகள் முகம் கொடுக்கும் சிக்கல்கள், வெள்ளநீர் கிராமங்களுக்குள் உட்புகுவதன் பின்னரான சுகாதார பாதுகாப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இவற்றைத்தொடர்ந்து முருக்கன் தீவு கிராம பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டல் மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.







