
மட்டக்களப்பு கிரான் குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய் சஞ்சீவனி வைத்தியசாலை கடந்த 01.06.2023 அன்று தனது கெத் லேப் சேவையினை ஆரம்பித்தது 18 மாதங்கள் கடந்த நிலையில் 2000 நோயாளர்களுக்கு மேல் இலவச இருதய சிகிச்சைகளை மட்டக்களப்பு போதானா வைத்தியசாலை இருதய மருத்துவப் பிரிவுடனும், கல்முனை ஆதார வைத்தியசாலை வசதிகளையும் பயன்படுத்தி மிகச்சிறப்பாக செயற்பட்டுவருகின்றது.எமது கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் இச்சேவையானது பெரும் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். கடந்த காலங்களில் மட்டக்களப்பில் இருந்து யாழ்பாணம் சென்றே இச்சேவையினை மட்டக்களப்பு வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவு மேற்கொண்டு வந்திருந்தது. தற்போது எமது பிரதேசத்திலும் இச்சேவை காணப்படுவதனால் மிக வேகமாக எமது மக்களுக்கு சேவை வழங்கக்கூடியதாக உள்ளது.
இங்கே முற்றுமுழுதாக இலசவ சேவையே வழங்கப்பட்டு வருகின்றது. இதன் அடுத்த கட்டமாக இருதயமாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான சத்திரசிகிச்சைக் கூடம் மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு என்பன கடந்த 04.01.2025 அன்று இவ்வைத்தியசாலையின் நிறுவுனர் சற்குரு மதுசூதனன் சாய் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிரிக்கட் ஜாம்பவான்களான அரவிந்தடி சில்வா, முத்தையா முரளிதரன், சமிந்தவாஸ், அஜந்த மென்டிஸ் மற்றும் இவ் வைத்தியசாலையின் இலங்கை தலைமை அதிகாரி பென்னி ஜெயவர்த்தன, வைத்தியசாலை பணிப்பாளர் ரமேஸ் ராவ், இவ்வைத்தியசாலையின் பொது முகாமையாளர் டேவிட் சில்வஸ்டர், இவ் வைத்தியசாலையின் பணிப்பாளர்களான டீபால் விக்ரமசிங்க, சுதர்சனம் தர்மரெட்ணம் ,நிசாந்த இவர்களுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி இரா. முரளீஸ்வரன், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி. ஜே.ஜே.முரளிதரன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் கு.சுகுணன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் க.கலாரஞ்சினி மற்றும் இவ் விழாவின் கதாநாயகர்களான இருதய வைத்திய நிபுணர்களான வினோதன் மற்றும் ரஜீவன் பிரான்சிஸ் அவர்களும் அவர்களது சக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.







