
மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கல் குழுக்கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 16.01.2025 அன்று இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்தில் சுற்றுச்சூழல் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் எஸ்.உதயராஜன் வழங்கினார். மேலும் மாவட்ட மட்டத்தில் தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பாக துறைசார் நிபுனர்களுடன் கலந்துரையாடப்பட்டு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வு, தொழிற்சாலைகளுக்கான அனுமதி வழங்கல், திண்ம கழிவு மற்றும் மருத்துவ கழிவுகளை முகாமைத்துவம் செய்தல், சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத செயற்பாடுகள், கரையோரங்களை அடையாளப்படுத்தல், மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், துறைசார் நிபுனர்கள், சுற்று சூழல் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







