
அகில இலங்கை திறந்த தேசிய பட்மின்டன் சுற்றுப்போட்டியானது மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இலங்கை பட்மின்டன் சங்கமும் கிழக்கு மாகாண பட்மின்டன் சங்கமும் இணைந்து இந்த சுற்றுப்போட்டியை நடாத்துகின்றது. எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்த தேசிய பட்மின்டன் சுற்றுப்போட்டியானது மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதான கட்டிடத்தொகுதியில் உள்ள உள்ளக அரங்கில் கோலாகலமாக ஆரம்பமானது.
கிழக்கு மாகாண பட்மின்டன் சங்கத்தின் தலைவர் எம்.எச்.எம்.மன்சூர் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டீனா முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன், பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசியக்கொடி, சங்கக்கொடிகள் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானதை தொடர்ந்து வீரர்கள் அறிமுகம்செய்யப்பட்டு போட்டிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. ஐந்து தினங்கள் நடைபெறும் இந்த சுற்றுப்போட்டியில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான வீர,வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.






