கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையானது பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 13.02.2025 அன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படும் சில முக்கிய பிரச்சினைகள் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை ஆளுநரின் வழிகாட்டுதலின் கீழ் உரிய அதிகாரிகளின் மூலம் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து ஆர்வத்துடன் வருகைதந்த மக்கள் ஆளுநருடன் கலந்துரையாடி தமது தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்று சென்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் எதிர் காலத்தில் நடமாடும் சேவைகள் வழங்குவதற்கு தேவையற்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன் மக்கள் சேவையை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் (காணி), மாகாண பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது காணி, கல்வி, நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, உள்ளூராட்சி மன்றங்கள், வனஜீவராசி, வனலாகா போன்ற பல திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது ஆளுநரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் கீழ் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டது.மேலும் சுமார் 45 வருட காலம் உரிமை கோரி தீர்க்கப்படாத கடைத்தொகுதி பிரச்சினைக்கான தீர்வு ஆளுநரினால் தீர்த்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரை பிரச்சினைகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள், வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகள் இவ்வாறு பல தரப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆளுநரை சந்தித்து மகஜர் ஒன்றினை வழங்கியிருந்ததுடன், அதனை பெற்றுக் கொண்ட ஆளுநர் இவர்களது பிரச்சனை நியாயமானது முதற்கட்டமாக 3500 ஆசிரிய வெற்றிடத்தை நிரப்புவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளவுள்ளதுடன், இவர்களது பிரச்சனையை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.





