
கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் உள்ள 21 கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 13.02.2025 அன்று இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் கீளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்கரையை சுத்தம் செய்யும் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தினால் 16.02.2025 அன்று காலை 7.00 மணிக்கு நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
''சுத்தமான கடற்கரை - கவர்ந்திழுக்கும் சுற்றுலாத் தளம்'' எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கு தேவையான முன்னாயத்தம் தொடர்பாக இதன் போது உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இராணுவத்தினரின் பங்களிப்பும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட அதிகாரி ஆசிபா, சுற்றுலாத்துறை அமைச்சின் மாவட்ட உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகாநந்தராஜ் என பலர் கலந்து கொண்டனர்.







