
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போதைப்பொருள் தடுப்பு செயலணி கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் மேற்பார்வையில் போதைப்பொருள் முற்தடுப்பு மாவட்ட இணைப்பாளர் திரு.தினேஸ் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 24.02.2025 அன்று இடம்பெற்றது. மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பை மேற்கொள்வதற்கு 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு அவர்களினால் செயற்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கினர்.
எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பை மேற்கொள்வதற்கு தேவையான செயற்பாடுகள் மற்றும் திட்டங்களை வகுத்ததுடன், எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றது. பிரதேச மட்டத்தில் சிறுவர் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு விழிப்புணர்வு மூலம் முற்தடுப்பை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனையற்ற மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் செயற்பட வேண்டும் என்பதுடன் சிறார்களை பாதுகாத்து விழிப்புணர்வு வழங்க வேண்டியது எமது கடமையும் பொறுப்புமாகும் என்றார். இதன்போது துறைசார் நிபுணர்களினால் போதைப் பொருள் முற்தடுப்பு தொடர்பான தரவுகள் அளிக்கை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், முப்படையினர், மாவட்ட சிறுவர் உள நல வைத்திய அதிகாரி டான் சௌந்தரராஜா, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட உளநல வைத்தியர் யூடி ஜெயக்குமார், பொலிசார், துறைசார் நிபுணர்கள்,தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.







