மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று 03.10.2019 காலை 10.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலகத்தின் கீழ் வருகின்ற அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு, பதினான்கு(14) பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட வேலைகளை இவ்வாண்டு இறுதிக்குள் பூர்த்தியாக்கப்பட வேண்டும் எனவும் இது தொடர்டபில் ஏற்படுகின்ற பிரச்சனைகள், தடைகள் என்ன என ஆராயப்பட்டு அதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட செயலகத்தின் புதிய கட்டிட வேலைகள், பிரதேச செயலகம், வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி, பட்டிப்பளை, ஆகிய செயலக கட்டிடங்கள் உடனடியாக வேலைகளை பூர்த்தி செய்து கையளிக்கும்படி ஒப்பந்தக்காரர்களுக்கு பணிப்புரைகளும் வழங்கப்பட்டது. இது தொடர்பாக பொறியியலாளர் கண்காணித்து துரிதப்படுத்தும்படியும் அரசாங்க அதிபரால் கோரப்பட்டது.
எதிர்வருகின்ற தேர்தல் மற்றும் மழைக்காலம் ஆரம்பிக்கவுள்ளமையினால் சகல கட்டுமானம், வீதி, பால வேலைகளை துரிதப்படுத்தி முடிப்பதற்கான சகல நடவடிக்கையினை எல்லா உத்தியோகத்தர்களும் ஒத்துழைப்புடன் நடாத்தி முடிக்கும்படி பணிக்கப்பட்டது. அத்துடன் ஒப்பந்தக்காரர்களுக்கான நிதிகளை உரிய காலத்திற்கு வழங்கப்பட்டும் ஒப்பந்த வேலைகள் தாமதமாவது ஏன் என்ற வினாவும் எழுப்பப்பட்டது. எதுவாக இருப்பினும் வேலைகள் ஆண்டு இறுதியை கவனத்தில் கொள்ளாது உடனடியாக முடிக்கப்பட வேண்டும் என பணிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் திரு.க.ஜெகதீஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், மாவட்ட ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.









