
மட்டக்களப்பு மாவட்டத்தில் புலம்பெயர் தகவல் மைய நிலையம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 03.06.2025 அன்று பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கடந்தகால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் 50 அரச அதிகாரிகளை பயிற்றுவித்து அவர்கள் மூலம் 5000 மக்களுக்கான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இச்செயற்திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் இதன்போது அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. மாவட்டத்திலிருந்து பாதுகாப்பான முறையில் மற்றும் சட்டரீதியான புலம்பெயர்வை உறுதிசெய்வதற்காக புலம்பெயர் தகவல் மையம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ICMPD இணைந்து மாவட்டத்தில் புலம்பெயர் தகவல் மைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொழிலுக்காக புலம் பெயர்வை மேற்கொள்ளும் நபர்கள் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் அவர்களை விழிப்புணர்வு மேற்கொள்வதற்கான அவசியம் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலின் போது நிகழ்நிலையினுடாக ICMPD சிரேஸ்ட திட்ட முகாமையாளர் கொல்டா மைராரோமா கருத்துக்களை பகிர்த்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கிழக்கு மாகாண சிரேஸ்ட முகாமையாளர் பிரசன்ன அபேவிக்ரம, மட்டக்களப்பு நிலைய பொறுப்பதிகாரி ரோகினி டி சில்வா, புலம்பெயர்வு தகவல் மையநிலைய இணைப்பாளர் மெஹமட் சமிர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவின் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.






