
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் புதிய மாவட்ட செயலகத்தில் 16.06.2025 அன்று வழங்கி வைத்தார். உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் எம்.ஆர். நிஷா அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் பாடசாலை இடை விலகலை குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொண்டு வருகின்றது. இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் பெறுமதியான கற்றல் உபகரணங்களை பெறும் மாணவர்கள் பொழுதுபோக்கில் நாட்டத்தை செலுத்தாது கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு சிறந்த புள்ளிகளை பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். இந்நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் ஏ.பிரபாகரன், தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏ.ஜே. சியாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான அனுசரணையை புகழிடம் , சைனிங் ஸ்டார், மற்றும் ஏ யு லங்கா நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.






