சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட உளநல விழிப்புணர்வு நிகழ்வுகள் மட்டக்களப்பு நகரில் நேற்று (10.10.2019) காலை சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந் நிகழ்வினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்த மாவட்ட உளநல விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட செயலகம், மாவட்ட உளநல சமூக ஒன்றியம் மற்றும் இம்மாவட்டத்தில் செயற்படும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மற்றும் சர்வதேச உள்ளுர் தொண்டார்வ நிறுவனங்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த மாவட்ட உளநல எழுச்சி நிகழ்வினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் உளநல விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இவ்வூர்வலம் மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பு நிலைய முன்றலில் ஆரம்பமாகி நகர வீதியினூடாக பயணித்து மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் நிறைவு பெற்றது.
இந்த மாவட்ட உளநல விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட உளநல வைத்திய நிபுணர் கே.கடம்பநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.ஏ.பாக்கியராஜா, மாவட்ட செயலக கணக்காளர் கே.பிரேமகுமார் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட உளநல சமூக ஒன்றியத்தின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.





