
மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் அபிவிருத்திக்கான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 08.07.2025 அன்று இடம்பெற்றது. மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளில் கைத்தொழில் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மாவட்ட கைத்தொழில் துறை சம்மேளனக் குழுக்கூட்டம் இடம்பெற்றதுடன், கைத்தொழிலாளர்களின் அபிவிருத்தி மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதில் கலந்துரையாடப்பட்டது. மேலும், 2025 ஆண்டின் அரையாண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்ட விடயங்களின் முன்னேற்ற மீளாய்வும் இதில் கவனிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், மாவட்டத்தில் பெறுமதிசேர்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கான தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று பணித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு வி. நவநீதன், துறைசார் நிபுணர்கள், திணைக்களத் தலைவர்கள், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு, கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், தேசிய தொழில் முயற்சி அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





