இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் கிழக்கு மாகாண மட்ட விருது வழங்கும் வைபவமானது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக "டேபா" மகாநாட்டு மண்டபத்தில் நேற்று 17.10.2019 காலை 11.00 மணிக்கு இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் திருமதி.நில்மினி.க.கேரத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
சமூக பாதுகாப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் உரையாற்றுகையில் இலங்கையில் 1996ம் ஆண்டு இலங்கையில் முதல் சமூக பாதுகாப்பு சபை ஆரம்பிக்கப்பட்டு சிறிய அளவு உத்தியோகத்தர்களுடன் முன்னெடுக்கப்பட்டு இன்று இலங்கை முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2018ம் ஆண்டு இலங்கையில் அதிகூடிய அங்கத்தவர்களை இனைத்து கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு காணப்படுகின்றது. 2018ம் ஆண்டு 18,370 அங்கத்தவர்களை இனைத்து அகில இலங்கைரீதியில் 1ம் இடம் பெற்றமையை பாராட்டினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இளமை காலத்தில் சிந்திக்க முடியாத விடயத்தினை நாம் முதியோர் காப்புறுதியின் மூலம் முன்னெடுத்து வருகின்றோம், முதுமை ஏற்படும் போதுதான் நமக்கு சமூக பாதுகாப்பு ஏற்படுகின்றது அந்த வகையில் நாம் அடையாளம் காணப்படும் முதியோருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றதாக குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் அவர்கள் உரையாற்றுகையில் முறைசாரா தொழிலில் ஈடுபடுகின்ற சமூகத்தினருக்கு சமூக பாதுகாப்பு காப்புறுதி மற்றும் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து முதியோர்களை சமூகத்தில் ஒரு பாதுகாப்பானவர்களாக கவனிக்கும் பொறுப்பான சேவையினை வழங்கும் சமூகப்பாதுகாப்பு சபையின் உத்தியோகத்தர்களையும் இதனுடன் இனைத்து செயலாற்றிய அனைத்து செயலக உத்தியோகத்தர்களையும் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெறுவதற்கு பாடுபட்டவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
சமூகப்பாதுகாப்பு சபையின் தலைவர் திரு.எம்.தேவக்க வீரசிங்க உரையாற்றுகையில் இரண்டாம் பட்சமான நிலையில் இருந்து பாதுகாப்பானதொரு நிலையினை உருவாக்கும் முகமாகவே எமது அமைப்பு செயல்ப்பட்டு வருகின்றது முதியோர்களை துன்புறுத்தல் தனிமைப்படுத்தல் சித்திரவதைப்படுத்தல் போன்றவற்றில் இருந்து சமூகத்தில் பாதுகாப்பை ஏற்படுத்தி ஊதியம் வழங்கும் செயல் திட்டங்களையும் எமது சமூக பாதுகாப்பு சபையானது சிறப்பாக நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் விருதுகளை பெற்றுக்கொள்வதற்காக திருகோணமலை உதவி மாவட்ட செயலாளர் என்.பிரதீபன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீஸ்வரன் பிரதேசசெயலாளர்கள், கணக்காளர்கள் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் கிராமசேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு விருதுகளையும் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.




















