மட்டக்களப்பு மாவட்டத்தின் போருக்கு முன்னரான நிலமையும் தற்போது காணப்படுகின்ற நிலமையினையும் அறிந்து கொள்வதற்காக "டோகா" பல்கலைகழக உயர் பட்டப்படிப்பினை மேற்கொள்கின்ற ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 16 பிரதி நிதிகள் கடந்த 20.10.2019 காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு வருகைதந்திருந்தனர்.
போர்கால நிலவரமும் தற்கால அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையிலான திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் திரு.எஸ்.அமுதலிங்கம் அவர்களின் குழுவினர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
டோகா பல்கலைகழகத்தில் மீள் கட்டுமானத்துறை, வர்த்தக வியாபார, தொழில்நுட்பத்துறை, அரசியல் விஞ்ஞான துறைகளில் கலாநிதி பட்டத்தினை பெறுவதற்காக கல்விகற்று வருகின்ற குழுவினரின் பணிப்பாளர் திரு.சுல்தான் பரகத் அவர்களும் அத்தோடு கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயர்தரப்பிரிவின் விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அஸிஸ் அவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் போது மத்தியகிழக்கு நாடுகள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கான சவால்களை முன்னிறுத்தி நாட்டினை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்கின்ற செயல்திட்டத்தினை போன்று இலங்கையையும் குறிப்பாக வட-கிழக்கு மாகாணங்களிலும் நிகழ்கின்ற தடையூறுகளை நிவர்த்தி செய்து எவ்வாறான அபிவிருத்தியினை முன்னெடுத்து செல்வது, எவ்வாறான உதவித்திட்டங்கள் மக்களுக்கு அவசியப்படுகின்றது என்பது தொடர்பாகவும், மீள்குடியேற்றப்படுவதற்கு எவ்வாறாக புறக்காரணிகள் தடையாக இருந்து வருகின்றது, அதற்காக எவ்வாறான தீர்வுகள் வழங்கலாம் என்பது பற்றி தெளிவாக ஆராயப்பட்டது.
டோகா பல்கலைகழகத்தில் கல்வி கற்றுவருகின்ற பாக்கிஸ்தான், துருக்கி, லிபியா, மொரோக்கோ, இந்தோனேஷியா, கட்டார், சிரியா, இலங்கை போன்ற நாடுகளின் உயர் கற்கைநெறியினை மேற்கொள்கின்ற மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


















