பருவபெயர்ச்சி காலநிலை அனர்த்தத்தினால் பாதிக்கப்படுகின்ற நிவாரண முன்னாயத்த திட்டமிடல் மற்றும் சென்டாய் கட்டமைப்பினை செயற்படுத்துதல் தொடர்பான கூட்டம் 18-10-2019 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச் செயலமர்விற்கு பொது நிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. எஸ்.அமலநாதன், தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் திரு. சமிந்த பத்திரண, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவிப்பணிப்பாளர் திரு. ஏ.எஸ்.எம்.சியாத், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திரு. ஆர்.சிவநாதன் அனர்த்த நிவாரண சேவைகள் பணியகம் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய அனர்த்த சேவைகள் மத்திய நிலையம் மற்றும் உலக உணவு நிகழ்ச்சித்திட்டம் இணைந்து நாட்டில் ஏற்படுகின்ற அனர்த்தத்தினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான முன்னாயத்த திட்டம் பற்றிய செயலமர்வின் மூலமாக விளக்கமளிக்கப்பட்டது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்படுகின்ற நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் காணப்படுவதனால் இது தொடர்பில் துரிதமாக மக்களுக்கு நிவாரண சேவைகள் சென்றடைவதற்கான முன்னாயத்தம் தொடர்பான விளக்கங்களுடன் மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பினை எவ்வாறு தடுப்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் எப்பகுதியிலாவது அனர்த்தங்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் உடனடியாக கிராமசேவையாளர்கள், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர் மூலமாக அரசாங்க அதிபருக்கு அறிக்கையிடுவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமான சேவையினை வழங்குவதற்கு முடியுமானதாக அமையும் எனவும் வட கீழ் பருவப்பெயர்ச்சி காலநிலையில் எதிர் கொள்வதற்கான முன்னாயத்த திட்டத்தின் தகவல்களை இணையத்தள தகவல் கட்டமைப்புக்குள் பதிவு செய்தல் தொடர்பான விளக்கங்கள் பொது நிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.அமலநாதன் அவர்களினால் வழங்கப்பட்டது.
தேசிய இயற்கை அனர்த்த காப்புறுதி நிகழ்ச்சி திட்டமானது உலகிலே அமெரிக்கா, இலங்கை ஆகிய இரு நாடுகளிலுமே நடைமுறையில் உள்ளது.இயற்கை அனர்த்த ஏற்படுகின்ற நிலையில் உயிர் மற்றும் உடமை சேதங்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் நஸ்டஈடு வழங்குவதற்கு இக் காப்புறுதித்திட்டம் உதவியாக அமைந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் திரு. சமிந்த பத்திரண அவர்கள் தெரிவித்தார்.












