மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் 24.10.2019 அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் USAID நிறுவனத்தின் பிரதிநிதியான திரு.ரங்ககே மற்றும் திரு.நவுஸ்சாட் உட்பட மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி.ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் திரு.எ.நவேஸ்வரன், பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ்.அமிர்தலிங்கம், நான்கு பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் கிராமங்களில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பல்லின மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற மனக்கசப்புக்கள், கிலேசங்கள், புரிந்துணர்வின்மை ஆகிய விடயங்களுக்கு தேவையான அறிவுரைகள், ஆலோசனைகளை கிராமமட்டத்திலிருந்து சமூகங்களுக்கு இடையே வழங்குவதுடன் ஒற்றுமையை மேலோங்க செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இது தொடர்பாக அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இம்மாவட்டத்திற்கு இது மிகவும் அவசியமானதும் தேவையானதுமாக கருதப்படுகின்றது. இம்மாவட்டத்திலே பல்லின சமூகம் வாழுகின்ற நிலையில் இனசமூக நல்லிணக்கத்தை மக்களின் உள்ளங்களிலிருந்து ஏற்படுத்துவதற்கு அரச சார்பற்ற நிறுவனமான இந்நிறுவனங்கள் முன்வந்து செயற்படுத்துவது என்பது ஒரு சிறப்பான விடயம் எனவும், உள்ளுரிலே சிறந்த சமாதான சமூக நல்லிணக்க பொறிமுறையை கோரளைப்பற்று தெற்கு, ஏறாவூர் பற்று, காத்தான்குடி, ஆரையம்பதி ஆகிய நான்கு பிரதேச செயலகங்களிலும் முன்னெடுத்திருப்பது சிறப்பான விடயமே எனவும் இந்த செயற்திட்டத்தை உண்மையாகவே மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று அவர்களின் மனங்களினிடையே மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது சிறந்த விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.
சமாதானமும் சமூகப்பணியும் எனும் நிறுவனம் இச்செயற்திட்டத்தில் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அது போன்று கிறிஸ்தவ வாலிப சங்கமும் இதில் இணைந்து இளைஞர்கள், சிறுவர்கள், முதியோர்கள் மனங்களில் ஒற்றுமைக்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளது. முதியோர்களுக்கு இடையே ஏற்படுகின்ற சவால்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பது, வாழ்வாதார இயலுமை, விவசாய உற்பத்திகளை மேம்படுத்தி சந்தைப்படுத்தலை அமைத்துக்கொடுத்தல் போன்றவற்றுக்கும் கிராமமட்ட மக்களிடையே உள்ளுர் பொறிமுறைக்கமைவாக மக்களை வலுவூட்டல் செய்து ஆதரவு வழங்குவதற்கும் USAID நிறுவனத்துடன் இணைந்து ஆறு மாதகால திட்டத்தினை முன்னெடுப்பதற்குள்ளமை குறிப்பிடத்தக்கது.















