
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சிறுவர் உரிமை அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.மதிராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 29.01.2026ம் திகதி இடம் பெற்றது. இதன்போது மாவட்டத்தின் சிறுவர்களது உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பதில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் பிரதேச மட்டத்தில் சிறுவர்களின் கல்வி, சுகாதாரம், போசாக்கு மற்றும் பாதுகாப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், போதைவஸ்து, வீதியோர யாசகம் மற்றும் வியாபாரம் உட்பட சிறுவர் அச்சுறுத்தல் தொடர்பான பல விடயங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன. அத்துடன் பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவில் ஆராயப்பட்டு தீர்வு காணப்படாத விடயங்களும், மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவில் முன்வைத்து தீர்வை பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள் பரிமாறப்பட்டன.
இந் நிகழ்வின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன், உதவி பிரதேச செயலாளர்கள், உயர் பொலிஸ் அதிகாரிகள், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், சிறுவர் மகளிர் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள், உளவியல் சமூக அலுவலர் மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், மாவட்ட முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், வீ முரளிதரன் தன்னார்வுத் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் துறைசார் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






