மட்டக்களப்பு மாவட்ட "பாம் பவுன்டேசன்" நிறுவனமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வாழ்வாதார உதவி திட்டங்களையும், அனர்த்த அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.
இதன் ஒரு திட்டமாக மட்டக்களப்பு மாவட்ட பாம் பவுன்டேசன் நிறுவனம் LICC நிறுவனத்துடன் இணைந்து அமிர்தகழி, புன்னைச்சோலை, மாமாங்கம், கருவப்பங்கேணி ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குடும்ப வாழ்வாதாரத்திற்கான "ஜீவனாளி" எனும் சிறிய ஆடைத் தொழிற்சாலை மட்டக்களப்பு அமிர்தகழி கிராமத்தில் 24.10.2019 அன்று திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பாம் பவுன்டேசன் நிறுவனத்தின் வடக்கு-கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு.சுனில் தொம்பே பொல தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் திரு.எ.நவேஸ்வரன், மண்முனை வடக்கு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு.சுதர்ஷன், LICC நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி திரு.பி.யசோதரன், LICC நிறுவனத்தின் ஆலோசகர் திருமதி.பரீடா ஷாகிர் மற்றும் அமிர்தகழி கிராம சேவை உத்தியோகத்தர், அமிர்தகழி கிராம சேவை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர், பாம்பவுன்டேசன் நிறுவன உத்தியோகத்தர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். நடைபெற்ற ஆடைத் தொழிற்சாலை திறப்பு விழா நிகழ்வில் பயனாளிகளினால் அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





