மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு இதுவரை 14 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 5 முறைப்பாடுகளும், ஏறாவூர் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியில் 5 முறைப்பாடுகளும், காத்தான்குடி பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்து 2 முறைப்பாடுகளும், வெல்லாவெளி பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்து 2 முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக உதவி தெரிவு அத்தாட்சி அலுவலர் தெரிவித்தார்.

குறிப்பாக வாகனங்கள், சொத்துக்கள் தொடர்பான முறைப்பாடும், அரச அலுவலர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் தனிநபர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான முறைப்பாடுகளும், நியமனம் மற்றும் இடமாற்றம், பதவி உயர்வு சம்மந்தமான முறைப்பாடும் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுகின்ற சில கட்சி சார்ந்த பிரச்சாரங்களை மாத்திரம் வெளியிட்டு வருவது தொடர்பாகவும் அத்தோடு போஸ்டர், பனர் கட்டவுட்டுக்கள் வாகனங்களில் கட்சிசார்பான படங்களை காட்சிப்படுத்துவது தொடர்பான முறைப்பாடுகளும், சட்டரீதியான அனுமதி இன்றி கூட்டங்கள் ஊர்வலங்கள், பேரணிகள் நடாத்தப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகளும் மற்றும் சட்டவிரோத வைபவங்கள்
ஏற்பாடு செய்து அதனூடாக பொருட்கள், ஏனையவற்றை விநியோகம் செய்வது தொடர்பான முறைப்பாடுகளும் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் முறைப்பாட்டு பிரிவில் பதிவாகியுள்ளது.

நீதியானதுமான, நேர்மையானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களத்தின் சட்டதிட்டங்களை மதித்து, பின்பற்றி முறையான சட்டரீதியான அனுமதியினை பெற்று கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஊர்வலங்களை நடத்திக்கொள்ளலாம் என உதவி தெரிவு அத்தாட்சி அலுவலர் தெரிவித்தார்.