சீரற்ற காலநிலையில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் துரிதமாக நடைபெற்று வருகின்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தயாரித்த பாதிப்பு விடயங்களுக்கு அமைய இவ்நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டுவருகின்றது. பாதிக்கப்பட்ட இம்மாவட்டத்திலுள்ள14 பிரதேசசெயலகப்பிரிவிலும் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கோரளைப்பற்று கிண்ணையடி பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் 10.12.2019 கிண்ணையடி பொது மண்டப கட்டிடத்தில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களினால் வழங்கி வைக்கபட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எ.எஸ்.எம் சியாத் ,அனர்த்த முகாமைத்துவ நிவாரண அதிகாரிகள் குழுவும் பங்கேற்றிருந்தனர்.
அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது எனவும் இந்த சீரற்ற காலநிலை தொடர்ந்து இருக்குமானால் மேலதிக நிவாரண உதவிகளை பெற்று தருவதற்கு நாம் நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.






