கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவி யேற்றுக்கொண்ட கௌரவ திருமதி அனுராதா ஜகம்பத் அவர்கள் 13/12/2019 அன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ முதல் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த புதிய ஆளுநர் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையிலான மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் வரவேற்கப்பட்டார்.
இங்கு வருகை தந்த புதிய ஆளுநர் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.இதன் போது இம்மாவட்டத்தில் தற்போதைய நிலவரங்கள் வெள்ள அனர்த்ததின் பாதிப்புக்கள் மற்றும் மாவட்டத்தின் அவசர தேவைகள் பற்றி அரசாங்க அதிபரால் புதிய ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இங்கு புதிய ஆளுநர் கருத்து தெரிவிக்கையில் அரசியல் இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்தை முன்னேற்றுவதை தாம் எதிர்நோக்கும் புதிய சவால் என்றும் இந்த இலக்கை பூர்த்தி செய்வதற்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் மற்றும் மாவட்டத்தில் செயற்படும் அரசாங்க பணியாளர்கள் எனக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க முன் வரவேண்டும் எனகேட்டுக்கொண்டார்
அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இம்மாவட்டத்தில் 30 வீதம் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்து வருவதுடன் சமூர்த்தி உதவி பெறுபவர்களாகவும் இருந்து வருகின்றனர். இம்மாவட்ட மக்களின் வறுமையை போக்க உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்
இந்த சந்திப்பில் பொது ஜனபெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்களாக திரு கே.சந்திரகுமார் ,கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளருமான திரு எம்.பி முசம்மில் , பொது ஜனபெரமுன கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் திரு என்.எம்.எம் சுஹைப், இலங்கை மக்கள் கட்சியின் தலைவரும் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் மட்டக்களப்பு இணைப்பாளருமான திரு எஸ்.விஸ்னுகாந்தன் ,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.சுதர்சினி ஸ்ரீகாந்த் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூவரஞ்சனி முகுந்தன் உட்பட பலர் பிரசன்னமாகிருந்தனர்.
இந்த விஜயத்தில் போது புதிய ஆளுநர் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசாங்க அதிபர் சகிதம் நேரில் சென்று பார்வையிட்டு அப்பிரதேச மக்களிடம் பாதிப்பின் சேதவிபரங்களையும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் புதிய ஆளுநர் இம்மாவட்டத்தின் பொதுசன பெரமுனுவின் கட்சி அமைப்பாளர்களையும் சந்தித்து இம்மாவட்டத்தின் நிலைமைகள் மற்றும் மக்கள் தேவைகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொண்டார்.






