புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது அபிவிருத்தி இணைப்பு குழு கூட்டம் 16/12/2019 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்தி இணைக்குழு தலைவர் கௌரவ திரு எஸ்.வியாழேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற  அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு ஞா.சிறிநேசன், திரு சீ.யோகேஸ்வரன், திரு அலிசாகீர் மௌலான,மாவட்ட அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார்,மாநகர முதல்வர் திரு ரீ.சரவணபவான்,காத்தான்குடி நகர சபை தலைவர் திரு எஸ்.எச்.எம்.அஸ்வர், மற்றும் பிரதேச சபை தலைவர்கள்,அரச திணைக்களங்களின் உள்ளுர் தலைவர்கள்,கிழக்கு மாகாண சபையின் செயலாளர்கள், பொலிஸ் மற்றும் முப்படையின் உயரதிகாரிகள்,பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டத்தில் அரசாங்கத்தினால் இம் மாவட்டத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 9964 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டிலான 10147 அபிவிருத்தி திட்டத்திற்கான முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் பூர்த்தி செய்யப்படாத திட்டங்கள் தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டதாக அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்கள்  தெரிவித்தார்.

இதன்படி மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்துவதற்கு 5846 திட்டங்களுக்கு 3159 மில்லியன் ரூபாவும்,கிழக்கு மாகாண சபை ஒதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு 506 திட்டங்களுக்கு 983 ரூபாவும் மத்திய அரசின் விசேட திட்டங்களுக்காக 61 அபிபிருத்தி திட்டங்களுக்கு 1949 மில்லியன் ரூபாவும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் 2959 திட்டங்களுக்கு 2578 மில்லியன் ரூபாவும் ஐரோப்பிய நிதி உதவி வீடமைப்பு திட்டத்தில் 581 திட்டங்களுக்கு 438 மில்லியன் ரூபாவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களினுடாக 194 திட்டங்களுக்கு 854 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசேட திட்டத்தில் கல்வி,கலாச்சாரம்,வீடமைப்பு,கால்நடை அபிவிருத்தி,மீன்பிடி,மற்றும் வீதி அபிவிருத்தி, விளையாட்டு,மீள்குடியேற்றம்,வாழ்வாதார திட்டம் போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

DSC 0365 resized  DSC 0326 resized  DSC 0335 resized  DSC 0339 resized  DSC 0347 resized  DSC 0375 resized