
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 18.12.2019 மாலை 2.30 மணியளவில் ஒளி விழா நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையிலே மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.எஸ்.ஸ்ரீகாந்த், காணி மேலதிக அரசாங்க அதிபர், திருமதி.முகுந்தன் நவரூபரஞ்சினி, உதவி மாவட்ட செயலாளர் திரு.எ.நவேஸ்வரன் ஆகியோருடன் மறை மாவட்ட குரு முதல்வர் திரு.எ.தேவதாஸன், கிரான் மெதடிஸ்த திருச்சபையின் போதகர் திரு.கந்தய்யா ஜெகதாஸ் ஆகியோரின் ஆசியுடன் இந் நத்தார் ஒளி விழாவினை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சிறப்பித்திருந்தனர்.
அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் ஒளி விழா என்பதன் உண்மையான அர்த்தத்தினை தெளிவுபடுத்துகின்ற போது ஒவ்வொரு மனிதர்களிடமும் உண்மையான சாந்தியும் சமாதானமும் நிறைந்த அன்பு உள்ளத்துடன் மற்ற வரை நேசிக்கின்ற புனிதத்தன்மையுடன் ஒவ்வொரு உள்ளங்களில் இப்பண்டிகை காலங்களில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அன்பின்பால் அற வழியில் யேசு கிறிஸ்து காட்டிய நன்மைகளை கடைப்பிடித்து சிறந்த மனிதராக வாழப்பழகுவது இப்பண்டிகை காலத்தில் அவசியமானது என்றும் தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லின கலாசாரங்களையும் இனமத கலாசாரத்தினையும் பின்பற்றுகின்ற சமூகங்கள் வாழுகின்ற இம்மாவட்டத்தில் நத்தார் நிகழ்வு போன்று தைத்திருநாள் கொண்டாட்டம், இப்தார் நிகழ்வு அது போன்று வெசாக் நிகழ்வு போன்ற மதம் சார்ந்த நிகழ்வுகளை கிரமமாக நடாத்துவதில் மாவட்ட செயலகம் சிறப்பு பெறுகின்றது என்றும் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த குழுவினருக்கு நன்றி கூறுவதுடன் இம்மாவட்டத்தில் தொடர்ச்சியாக கலாசார நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வின் போது நாடகம், கலாசார நிகழ்வுகள், கிறிஸ்தவ குழுப்பாடல்கள், கரோல்கீதம் போன்றவையுடன் நத்தார் தாத்தாவினால் சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி அவர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்ததையும் சிறப்பானதாக காணப்பட்டது.






